எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ‘அக்வா பிளானட் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேசக் கண்காட்சி’ குறித்து ஊடகங்களை அறிவூட்டும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பானது இன்றைய தினம் கொழும்பில் உள்ள தாமரைக் கோபுர வரவேற்புத் தளத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகரன், இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
”2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் 23 ஆம் திகதி வரை கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியானது, அலங்கார மீன்களின் அழகு, சுவையான கடல் உணவுகள், நவீன தொழில்நுட்பம், நிலையான நடைமுறைகள் மற்றும் நீரியல் கலாச்சார அனுபவங்கள் ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும்.”
அவர் மேலும் தெரிவிக்கையில், 150 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காட்சி அரங்குகளுடன் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. இது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு புதுமையான தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களுடன் பின்வரும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்:
கலாநிதி கோலித்த கமல் ஜினதாச – அமைச்சின் செயலாளர்
சுசந்த கஹவத்த – பணிப்பாளர் நாயகம், மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்
கித்சிறி தர்மப்பிரிய – தலைவர், தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை
இந்த மாபெரும் சர்வதேசக் கண்காட்சி நாட்டின் நீரியல் துறைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் என்றும் இந்த அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
By C.G.Prashanthan