பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றி சாதனை படைத்த மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகா வித்தியாலய மாணவி வில்சன் வில்சியாவை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
டயகம ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் புதிய சாதனையாக 1.56 மீற்றர் பாய்ந்து தனது புதிய சாதனையை நிலை நாட்டி வில்சியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஏற்கெனவே 2023 ஆம் ஆண்டு உயரம் பாய்தலில் தேசிய மட்ட சாதனையாக 1.55 மீற்றர் உயரத்தை வத்தளை சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி நிலை நாட்டியிறுந்தார்.
வில்சியாவை கௌரவிக்கும் நோக்கில் குறித்த பாடசாலை சமூகம் மற்றும் கிராம மக்கள் மாணவியை மன்னார் நுழைவுப் பாலத்தில் இருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரம் வாகன பவனியாக பேசாலை வரை வரவேற்று பேசாலை பிரதான சந்தியில் இருந்து பான்ட் வாத்தியம் மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்வுடன் வரவேற்று பாடசாலை அரங்கில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த பாடசாலையின் அதிபர் மெரின் சோசை நெல்சன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள்,மற்றும் பேசாலை கிராம மக்கள் , பேசாலை புனித வெற்றி நாயகி அன்னை ஆலயத்தின் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் கூட்டாக இணைந்து சாதனை மாணவி வில்சியா, அவரது பெற்றோரையும் கௌரவித்து பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து அன்பளிப்புகளை வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.