சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, இந்திய நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை பாராட்டியதுடன், உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத் துறை விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
புதிய அறிக்கை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக வைத்து, எப்.ஏ.டி.எப்., அமைப்பு செயல்படுகிறது.
‘சொத்து மீட்பு வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகள்’ என்ற பெயரில் புதிய அறிக்கையை நேற்று வெளியிட்ட அந்த அமைப்பு, சொத்துக்களை பறிமுதல் செய்வதில், நம் நாட்டின் அமலாக்கத்துறை உலகளவில் முன்மாதிரியாக செயல்படுகிறது என்றும் பாராட்டி உள்ளது.
எப்.ஏ.டி.எப்., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
பொருளாதார மற்றும் நிதி சார்ந்த குற்றங்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் திறன் கொண்ட ஒரு வலுவான கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது.
நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட சொத்து மீட்டெடுப்பு வழிமுறையை அந்நாடு உருவாக்கி உள்ளது.
இது, சட்டப்பூர்வ கருவி களையும், பல நிறுவனங்களுக்கு இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பையும் இணைக்கிறது.