காலியில் அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது துப்பாக்கிதாரிகள் பயணித்ததாக கூறப்படும் கார் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது,
அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் காரில் சென்ற இனந்தெரியாத நபர்கள் சிலர் வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்த்தகர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், துப்பாக்கிதாரிகள் பயணித்ததாக கூறப்படும் சிவப்பு நிற கார் ஒன்று கரந்தெனிய – மஹலுதண்ட பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.