யாழ் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பல ஆண்டுகளாக மணல் மண் கொள்ளை இடம் பெற்றுவருகின்றது.
சட்ட விரோதமான மணல் மண் அகழ்வு இடம் பெற்றுவருவதை தொடர்ந்து கடந்தமாதம் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான இளங்குமரன் குறித்த பகுதிகளை பார்வையிட்டு தொடர்சியாக மணல் மண் கொள்ளையில் ஈடுபடுவோரது பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் சில நாட்கள் மணல்மண் கொள்ளை நிறுத்தப்ட்டிருந்தது. தற்போது பதினைந்து நாட்களுக்கு மேலாக மணல் கொள்ளை இரவு பகலாக இடம்பெற்று வருகிறது.
குறிப்பாக வடமராட்சி கிழக்கு பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதிகளான தாழையடி கடல் நீரை நன்னீராக்கும் சுத்தரிப்பு நிலையம் அமைந்துள்ள பகுதி, குடாரப்பு, செம்பியன்பற்று வடக்கு, செம்பியன்பற்று தெற்கு, குடத்தனை கிழக்கு, போன்ற பகுதிகளிலேயே அதிகளாவான மணல் மண் கொள்ளை இடம் பெற்று வருகின்றது.
இயற்கை சமநிலையை பேனுவதற்கான நிரந்தர மர நடுகை எனும் பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும் பகுதிகளிலும் பாரிய மணல் மண் கொள்ளை இடம்பெற்று வருகின்றது.
குறித்த மணல்மண் கொள்ளை 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கவேண்டியவர்கள் வீதிகளில் தரித்து நிற்கின்றவேளைகளில் கூட இடம் பெற்று வருகின்றது.
தாழையடி பிரதேசத்தில் இடம்பெறும் சட்ட விரோதமாக மண் அகழும் இடத்திற்கும் மருதங்கேணி பொலிஸ் நிலையமும் சுமார் 1kM தொலைவில் உள்ளது. அவ்வாறிருந்தும் இவ்வாறு மணல் கொள்ளை இடம் பெறுகின்றது. இவ்வாறு மணல் மண் கொள்ளை இடம் பெறும் பகுதிகள் பாரிய நீர்த் தேக்கங்களாக காட்சியளிக்கின்றன.
இவ்வாறன மணல் மண் அகழ்ந்து பிரதேசங்களில் குடியிருப்புக்கள் பல உள்ளன. அந் நீர்த்தேக்க்களால் மழை காலத்தில் சிறுவர்கள் உயிரிழக்கக் கூடிய அபாயமும் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் இச் சட்ட விரோதமான மணல் மண் அகழ்வுகளில் ஈடுபடும் மண் மாபியாக்களுகதகு உடனடியா நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
ஆனால் எந்தவிதமான நடவடிக்கைகளும் இல்லை.
மாறாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை வழிமறித்து இனந்தெரியாத மண் மாபியா கும்பல்கள் மிரட்டுவதும், நேரடியாக அச்சுறுத்துவதும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.
அண்மையில் ஊடகவியலாளர் ஒருவரது தாயர் வீட்டுக்கு சென்ற ஒருவர் அவர் அங்கு இல்லாத நிலையில் அவ்வீட்டின் கேற்றை தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். இன்னுமொருவர் பாராளுமன்ற உறுப்பினர் தனது நெருங்கிய உறவினர் என்றும் அவர் ஒருபோதும் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாட்டார் என்றும் நேரடியாக ஊடகவியலாளர் ஒருவரிடம் சவால் விடுத்துள்ளார்.
வடமராட்சி கிழக்கில் பல சமூக மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்கள் பலர் தமது மணல் மண் வளம் கொள்ளையிடப்படுவது தொடர்பாக துணிந்து கருத்து சொல்வதற்கே அச்சப்படுகின்றனர். காரணம் குறித்த மணல் மண் மாபியாக்கள் பலரை இதுவரை அச்சுறித்தியுள்ளனர். ஆனால் எவரும் முறைப்பாடு செய்வதற்கு கூட அச்சப்படுகின்றனர்.
வடமராட்சி கிழக்கின் வளங்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.