சிறப்பு பாதுகாப்பு ஆய்வுக்கு பாராளுமன்றம் உட்படுத்தப்படவுள்ளதாக சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்த ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டடமும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அன்றையதினம் விருந்தினர்களுக்கு மட்டுமே பொது கேலரி அனுமதிக்கப்படும் என சபாநாயகர் கூறினார்.
விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமலில் இருக்கும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்திற்கு வாகனங்களில் வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதியுடன் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அன்றைய தினம் சிறப்பு போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.