கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள திருப்போனித்துரா பகுதியை சேர்ந்த பிரபல நடிகை லட்சுமி மேனன். இவர் மலையாள படங்கள் மட்டுமின்றி கும்கி, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்தநிலையில் கொச்சி பானர்ஜி சாலையில் உள்ள மதுபான பாருக்கு தனது தோழி உள்பட 3 பேருடன் கடந்த 24-ந்தேதி இரவு லட்சுமி மேனன் சென்றிருக்கிறார். அப்போது அங்கு மது அருந்த வந்திருந்த ஆலுவா பகுதியை சேர்ந்த ஐ.டி. ஊழியர் அலியார் ஷா சலீம் என்பவருக்கும், நடிகை உள்பட 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்ட 4 பேரும் மற்றொரு காரில் அவரை பின்தொடர்ந்து சென்று நடுரோட்டில் வழி மறித்து தகராறு செய்துள்ளனர். மேலும் ஐ.டி. ஊழியரை அவரது காரில் இருந்து இறக்கி, தங்களின் காரில் ஏற்றி தாக்கியுள்ளனர். அதன்பிறகு ஒரு இடத்தில் ஐ.டி.ஊழியரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீஸ் நிலையத்தில், ஐ.டி.ஊழியர் அலியார் ஷா சலீம் புகார் செய்தார். அவர் நடிகை லட்சுமிமேனன் உள்ளிட்ட 4 பேரும் தன்னை காரில் கடத்திச் சென்று தாக்கியதாக கூறியிருந்தார். அவரது புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.லட்சுமி மேனனின் ஆண் நண்பர்கள் அனீஸ், மிதுன், தோழி சோனாமோல் ஆகிய 3பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே, பாரில் நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோருக்கும், ஐ.டி.ஊழியருக்கும் ஏற்பட்ட தகராறு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.
இதனையடுத்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு நடிகை லட்சுமிமேனன் தலைமறைவானார். அவர் எங்கு இருக்கிறார்? என்று போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு தொடர்பாக நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள ஐகோர்ட்டில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு சமரசம் செய்துவிட்டதால், லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என எதிர் மனுதாரர் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 17 வரை அவரை கைது செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.