தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது சொல்லில் அல்ல செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கின்றது. இந்த அரசாங்கத்தின் காலத்திலேயே வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று நம்புகின்றேன். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ் ‘குறிகாட்டுவான் இறங்குதுறைக்கான மறுசீரமைப்பு வீதிக்கட்டுமானத்தின்’ ஆரம்ப நிகழ்வு மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் முதல் தடவையாக எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு என்பன குறிகாட்டுவானில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
இங்கு உரையாற்றிய ஆளுநர்,”பல அமைச்சர்கள் வடக்கு மாகாணம் தொடர்பான விடயங்களை சாதகமாகவே அணுகுகின்றார்கள். அது எமது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவற்றுக்கு மேலாக, நெடுந்தீவு பிரதேசத்துக்கே உதவி அரசாங்க அதிபராக முதலில் நியமிக்கப்பட்டேன். அந்தப் பிரதேச மக்களின் வலிகள் தெரியும். அந்தப் பிரதேசத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பது சிறப்பானது. இவ்வாறான அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்படும், என்று குறிப்பிட்டார்.