அரசாங்கம் ஒருபீப்பாய் கச்சா எண்ணெயை சுமார் 268 டொலர் என்ற அதிக விலைக்கு கொள்வனவு செய்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்குமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாடு வழக்கத்திற்கு மாறாக அதிக விலைக்கு கச்சா எண்ணெயை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் உரிமைகோரல்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இவ்வளவு அதிக விலைக்கு கச்சா எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டது என்ற தகவலின் அடிப்படை என்ன என்று கேள்வி எழுப்பினார். அத்துடன், அவ்வாறு யார் கூறியது என்றும் அவர் வினவினார்.
சில ஊடகங்கள் வாயிலாகவே இந்தத் தகவல் வெளியானதாக ஒரு செய்தியாளர் சுட்டிக்காட்டியபோது, அந்த உரிமைகோரலை அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டமாக நிராகரித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக எவரிடமாவது ஆதாரங்கள் இருந்தால் அவற்றை சமர்ப்பிக்குமாறும் அவர் இதன்போது சவால் விடுத்தார்.