2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக, இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு குறித்த பொதுமக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 25ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 18ஆம் திகதி வரை வாய்மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
09 மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னரே ஏனைய விடயங்களையும் கருத்திற் கொண்டு மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி தீர்மானத்தை ஆணைக்குழு எடுக்கவுள்ளது.
2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்காக, அதாவது ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு அனுமதி கோரி கடந்த 13ஆம் திகதி இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்தது.
எனினும், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்காக இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட 11.57 சதவீத கட்டண அதிகரிப்பிற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.