2026 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் கணக்கெடுப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார்.
வாக்காளர்கள் தகுதி பெறும் திகதியாக பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி கருதப்படுவதாகவும், அத்திகதியில் 18 வயது பூர்த்தியடைந்த மற்றும் அப்பிரதேசத்தில் வசிப்பதை உறுதிப்படுத்தியவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளும் வசதி காணப்படுவதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
வாக்காளர் பட்டியலுக்கான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, வீடு வீடாகச் சென்று தரவுகளை சேகரிக்கும் முறை மற்றும் உள்வாங்கும் மற்றும் நீக்கும் முறைமை ஆகியவை பின்பற்றப்படுவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டிற்கான தகவல்களை சேகரிக்கும் போது உள்வாங்கும் மற்றும் நீக்கும் முறைமையே பின்பற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களிலும் தற்போது 2026 வரைபு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஊடாகவும் தமது பெயர் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பரிசீலிக்கும் வசதி காணப்படுவதாக அவர் அங்கு குறிப்பிட்டார்.
வாக்காளர் இடாப்பிற்காக பிரதேச ரீதியாக தகவல்களை சேகரித்தல் பெப்ரவரி 01 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.
கிராம உத்தியோகத்தர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் ஊடாக உள்வாங்கல் மற்றும் நீக்கல் பட்டியல்களைத் தயாரித்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு ஒப்படைத்தல் மார்ச் 03 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.
அத்தகவல்களுக்கு அமைய பெயர் பட்டியலை மீண்டும் பட்டியலிட்டு மே 5 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை 28 நாட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் ரசிக பீரிஸ் தெரிவித்தார்.