‘வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025-2026)’ இனை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் வீதி விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் தொடர்பாக தொடர்ந்தும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. வீதி விபத்துக்கள் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் எமது நாட்டில் இறப்பு விகிதம் 10,000 இற்கு 11.2 ஆகப் பதிவாகியுள்ளது.
குறித்த வீதிப் பாதுகாப்புக்கான இரண்டாவது உலகளாவிய குறிகாட்டி (2021-2030) மூலம் விதந்துரைக்கப்பட்டுள்ள மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்றுள்ள பாதுகாப்பு எல்லையைக் கடந்துள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் தரவுகள் மற்றும் அறிக்கைகளுக்கமைய, 2020-2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது நாட்டில் 118,697 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், குறித்த விபத்துக்களால் 12,322 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் காரணமாக 400 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
அதனால், வீதி விபத்துக்களால் தொடர்ந்து அதிகரித்து வரும் மரணங்கள் மற்றும் பாதிப்புக்களைக் குறைத்து வீதிகளைப் பயன்படுத்தும் அனைவருக்குமான பாதுகாப்பான மற்றும் எப்போதும் சமமான வீதிச் சூழலை உருவாக்குவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளின் தரப்பண்புகளை அதிகரித்தல், பாதுகாப்பான வாகனங்கள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தல் மற்றும் குறித்த வாகனங்களை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த நோக்கங்களுடன் கூடியாக தயாரிக்கப்பட்டுள்ள ‘வீதிப் பாதுகாப்பு செயற்பாட்டுத் திட்டம் (2025-2026)’ இனை அமுல்படுத்துவதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.