பொது நிதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கே அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள ஹர்ஷ டி சில்வா, மக்களின் பணம் 2.5 மில்லியன் டாலர் மாயமானது குறித்து நிதியமைச்சும் மத்திய வங்கியும் இதுவரை மௌனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹர்ஷ டி சில்வாவின் முக்கிய குற்றச்சாட்டுகள்:
அலட்சியம் மற்றும் தோல்வி: “இது வெறும் அலட்சியம் மட்டுமல்ல, ஏற்கனவே நாங்கள் எச்சரித்த ஒரு தோல்வி. கடன் மேலாண்மைப் பிரிவை மத்திய வங்கியிலிருந்து திறைசேரியின் பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்திற்கு (PDMO) மாற்றியபோது, அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமிக்குமாறு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தினோம். ஒரு நாட்டின் கடனை உலகச் சந்தையில் கையாளுவது என்பது சாதாரண எழுத்தர் வேலை அல்ல,” என அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடன் தவணை செலுத்தத் தவறியதா? (Default): கடன் வழங்கிய தரப்பிற்கு ஐந்து தவணைகள் இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுவதால், தொழில்நுட்ப ரீதியாக இலங்கை கடன் செலுத்தத் தவறிய நாடாக (Default) கருதப்படுமா என்ற சிக்கல் எழுந்துள்ளதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தல்: சூதாட்ட ஒழுங்குமுறை, 2025 நான்காம் காலாண்டு நிதிச் செயல்பாடு மற்றும் நிதி-பணவியல் கொள்கை ஒருங்கிணைப்பு தொடர்பான மூன்று தொடர்ச்சியான CoPF கூட்டங்களுக்கு நிதியமைச்சு சமூகம் அளிக்கவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார். “எனது 15 ஆண்டு கால நாடாளுமன்ற வாழ்க்கையில், நாடாளுமன்றக் கண்காணிப்புக் குழுவை இவ்வளவு தூரம் அவமதிப்பதை நான் பார்த்ததில்லை,” என்றும் அவர் சாடியுள்ளார்.
பதிலுக்காகக் காத்திருப்பு: இது தொடர்பாகத் திறைசேரிச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், இந்த நிதி இழப்பு எப்போது, எப்படி நடந்தது என்பது குறித்தும், இதுவரை மௌனம் காப்பது ஏன் என்பது குறித்தும் இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹர்ஷவின் அழைப்பு:
“இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல. நாம் எந்தத் தரப்பில் நின்றாலும், இதற்காக ஒன்றிணைந்து பொறுப்பானவர்களைத் தண்டித்து, நமது நாட்டின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். பொது நிதி தொடர்பான பொறுப்புக்கூறல் இலங்கையர்களுக்கு அவசியமானது,” என அவர் வலியுறுத்தியுள்ளார்