இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
ஸ்ரீ சரணியின் துல்லியமான பந்துவீச்சம் ஷபாலி வர்மாவின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.
இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 – 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.
இதுவரை இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் இந்தியா 22 – 5 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன் அதன் ஆதிக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது.
முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கை 130 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதுடன் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
முதலாவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன இன்றைய ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ஓரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இந்தப் போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அளவுக்கு அதிகமாக பந்தை சுழற்றி அடிக்க முயன்று 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
இதனைத் தொடர்ந்து ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் இணைப்பாட்டத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹசினி பெரேரா 22 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
மொத்த எண்ணிக்கை 104 ஓட்டங்களாக இருந்தபோது ஹர்ஷித்தா சமரவிக்ரம 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
அவர்களைவிட கவிஷா டில்ஹாரி 14 ஓட்டங்களையும் கௌஷினி நுதியங்கனா 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்தவீச்சில் ஸ்ரீ சரணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஸ்ம்ரித்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் 19 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
மந்தனா இந்தப் போட்டியிலும் பிரகாசிக்கத் தவறி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.