1996ஆம் ஆண்டிலேயே செம்மணி புதைகுழியை தோண்டியிருக்க முடியும். ஆனால் நீதிபதி இளஞ்செழியன் அதனை புல்டோசர் கொண்டு மண் போட்டு மூடினார் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவீன தலைப்பின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
மாகாண சபைத் தேர்த்தலில் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக இப்போது போட்டியொன்று ஆரம்பித்துள்ளது. தனி மனிதனொருவனுக்கு எதிராக அரசாங்கம், முன்னாள் அரசாங்கங்கள் மாபெரும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளன .
நீதிபதி இளஞ்செழியனை நானும் நம்பினேன். எமது சமூகமும் நம்பியது. ஆனால் காலம் போக போகத்தான் தெரிகின்றது. எந்த செம்மணியை தோண்டிவிட்டு மழைக்காலம் என இப்போது மூடியுள்ளீர்களோ, அதே செம்மணியை இளஞ்செழியனால் தோண்டியிருக்க முடியும்.
ஜீ.எல்.பீரிஸின் மாணவன், சந்திரிகாவின் தோழன் என்ன செய்தார் என்றால் புல்டோசர் மூலம் மண்போட்டு மூடினாராம். நான் அரசியலுக்கு வந்த பின்னர் இப்போதுதான் தெரியும். இதனை மிகப்பெரிய கவலையுடன் கூறிக்கொள்கின்றேன் என்றார்.