காட்பாடி
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், தவெகவின் 100 நாள் ஆட்சி மற்றும் சட்டமன்றச் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பகிர்ந்துகொண்ட முக்கியக் கருத்துகள்:
திமுகவில் அனைவருக்கும் சம வாய்ப்பு:
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “திமுகவில் இளைஞர்களுக்கும் சரி, அனுபவம் வாய்ந்த முதியவர்களுக்கும் சரி உரிய வாய்ப்புகள் எப்போதும் உண்டு,” என்றார்.
100 நாளில் புதிய திட்டம் எதுவும் இல்லை:
“என்னுடைய நீண்ட அரசியல் வாழ்வில், இந்த 100 நாள் ஆட்சியில் தவெக அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை. கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குப் பெயர்களை மட்டுமே மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ.2,500 மற்றும் ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் போன்ற தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட இந்த 100 நாட்களில் நிறைவேற்றவில்லை.”
மானியக் கோரிக்கை விவாதத்தில் குளறுபடி:
“சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, அதிகாரிகள் எழுதித் தருவதை மட்டுமே அமைச்சர்கள் வாசிக்கிறார்கள்; கோரிக்கைகள் குறித்தோ, தங்கள் துறைகள் குறித்தோ பேசுவதில்லை. விவாதத்தின் போது எம்.எல்.ஏ-க்கள் முன்வைக்கும் குறைகளைக் குறித்துக்கொண்டு துறை ரீதியாகப் பதில் அளிப்பதே சரியான முறை.”
அமைச்சர் ஆனந்த் மீது விமர்சனம்:
“நான் வகித்த நீர்வளத்துறை இலாகாவை தற்போது கவனித்து வரும் அமைச்சர் என்.ஆனந்த், தனது துறை சார்ந்த விவகாரங்கள் குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல், சட்டமன்றத்தில் தனது தலைவர் (விஜய்) குறித்து மட்டுமே தொடர்ந்து பேசுகிறார்,” என்று துரைமுருகன் குற்றம்சாட்டினார்.
#Duraimurugan #DMK #TVKGovernment #TVK100Days #MinisterAnand #TNAssembly #VelloreNews #TamilNaduNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates