இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான ஹுசைன் அகமது பைலா இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் அரசுக்கு 9 கோடி 96 இலட்சத்து 79 ஆயிரத்து 799 ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின்படி, அவர் தனது பதவிக் காலத்தில் எந்தத் தேவையும் இல்லாமல் 50 தற்காலிக சேமிப்புக் களஞ்சியக் கட்டமைப்புகளை இறக்குமதி செய்தார் எனவும், இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது எனவும், வெளித் தரப்பினருக்கு அந்தத் தொகைக்கு சமமான இலாபம் ஏற்பட்டது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஹுசைன் அகமது பைலா விசாரணைகளின் பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
2015 பெப்ரவரி முதல் ஒக்டோபர் வரை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றிய பைலா, 2004 முதல் 2010 வரை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
தனது பதவிக் காலத்தில், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தேசிய நிறுவன மேம்பாடு (2004–2005), திட்ட அமலாக்கம் (2005 – 2007) மற்றும் வெளியுறவு (2007–2010) உள்ளிட்ட பல பிரதி அமைச்சர் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.