கொழும்பு மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று (04) முதல் தொடங்கியுள்ளனர்.
விமல் வீரவன்சவின் ஹோகந்தர வீடு மற்றும் பத்தரமுல்லை அலுவலகத்தை குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிகாலை சோதனையிட்டபோது, அவர் அந்த இடங்களில் இல்லை என்பதினை கண்டறிந்துள்ளனர்.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் (03) பிறப்பித்த பிடியாணையின் படி விமல் வீரவன்சவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
விமல் வீரவன்சவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அங்கு இருந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமல் வீரவன்ச மீது, தேசிய சுதந்திர முன்னணிக்கு ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட 40 அரசு வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசாங்கத்திற்கு சுமார் 90 இலட்சம் ரூபாய் நிதி நஷ்டம் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் முன்னிலையாக தவறியதற்காக அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.