ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தல, ஹொன்னந்தர பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய கிறிஸ்தவ மத போதகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த போதகர் மற்றுமொரு நபருடன் முச்சக்கரவண்டியில் ஹைலெவல் வீதி ஊடாக அவிசாவளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். இதன்போது, முச்சக்கரவண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசைக்கு (மறுபக்க ஒழுங்கைக்கு) மாறியுள்ளது. இதன்போது அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியின் கைப்பிடி (Handle) போதகரின் மார்புப் பகுதியை ஊடுருவிச் சென்றுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த போதகரும் அவருடன் பயணித்த மற்றுமொரு நபரும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி போதகர் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.