யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து தொடர்ந்தும் பயணிக்கப்போவதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த சுதந்திர தினத்தன்று பல்கலைக்கழக வளாகத்தில் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்டமை குறித்து யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று வியாழக்கிழமை மூன்று மாணவர்களிடம் சுமார் 5 மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது மாணவர்களுக்கான சட்டப் பிரதிநிதித்துவத்தை சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழங்கியிருந்தார்.இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் குறிப்பிட்டதாவது,
தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் வெளிப்படுத்தும் விதமாகவே பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களின் உணர்வுபூர்வமான மற்றும் நியாயமான ஒரு விடயமாகும்.
மாணவர்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸார் முன்னெடுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் துணை நிற்போம் என்றார்.
இன்றைய விசாரணையின் போது மாணவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அங்கிருந்து கிடைக்கும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தமக்குத் தெரிவித்ததாக சட்டத்தரணி மணிவண்ணன் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மாணவர்களைப் பொலிஸ் விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று விரிவுரைகளைப் புறக்கணித்து பல்கலைக்கழக முன்றலில் பாரிய எதிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கவுள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் உறுதியளித்துள்ளார்.