வவுனியா மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகம், உத்தியோகபூர்வமாகச் செயல்படுவதற்கு அடுத்த மாதம் 19 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
வவுனியா மாநகர சபையின் பிரதி மேயர் பரமேஸ்வரன் கார்த்தீபன் வவுனியா மாநகர சபை எல்லைக்குள் இல்லாமல் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்கு உட்பட்ட எல்லைக்குள் வசிப்பவர் எனத் தெரிவித்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வவுனியா மாநகர சபை எல்லைக்குள் வசிக்காத ஒருவர் மாநகர சபைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமை தவறென தெரிவித்து தேசிய மக்கள் கட்சியின் சார்பில் விஜயகுமார் என்பவரும் சுயேச்சை குழு உறுப்பினரான பிரேமதாஸ் சிவசுப்ரமணியம் என்பவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த நான்கு தவணைகள் விசாரித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.