பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ‘சுப்பர் முஸ்லிம்’ அமைப்பின் தலைவர் கலாநிதி கே.எல்.எம். ரயீஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“கடந்த ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் எனது பெயர் சேர்க்கப்பட்டமை தொடர்பாக, ஒரு சுருக்கமான மற்றும் பொறுப்பான விளக்கத்தை வழங்க விரும்புகிறேன்.
நான் எந்தவித வன்முறை, தீவிரவாத அல்லது சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டதில்லை என்பதையும், பயங்கரவாதம் தொடர்பான எந்தக் குற்றச்சாட்டிலும் எனக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதோ அல்லது தண்டனை விதிக்கப்பட்டதோ இல்லை என்பதையும் தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளிப்படையான சில உண்மைத் தவறுகள் காணப்படுகின்றன.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள “Super Muslim” என்ற பெயரில் இலங்கையில் எந்தவொரு அமைப்பும் இல்லை. “சஹாபி தரீகா” என்ற சொல், நபியவர்களின் தோழர்களான சஹாபாக்களின் வழிமுறையை மட்டுமே குறிக்கிறது. இது ஒரு அமைப்போ அல்லது தீவிரவாதக் குழுவோ அல்ல; மாறாக இது பொதுவான இஸ்லாமிய நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விபரங்களிலும் தவறுகள் உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் ஒன்று எனக்குச் சொந்தமானதல்ல. மேலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இணையத்தளம் அல்லது ஒன்லைன் இணைப்புடன் எனக்கு எந்தவிதத் தொடர்பும் அல்லது அறிவும் இல்லை. இவ்வாறான தவறுகள் தீவிரமாகக் கவலைக்குரியவையாகும்.
இந்த நிலைமை தவறான தகவல்கள் அல்லது ஆள் அடையாளக் குழப்பம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன். இது எனது தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட எந்தச் செயல்பாட்டினாலும் ஏற்பட்டதல்ல. இந்த விடயம் எனது நற்பெயருக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நான் முறையான சட்ட நடைமுறைகளின் மூலம் சட்ட நிவாரணங்களை நாடியுள்ளேன். அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் முறையான மனுக்களைச் சமர்ப்பித்துள்ளேன்.
நான் நாட்டின் சட்டத்தையும், அரசியலமைப்பையும், இலங்கை நீதித்துறையையும் முழுமையாக மதிக்கிறேன் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். எனது விளக்கங்களையும் ஆவணங்களையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்து, அதன் தீர்ப்பை மரியாதையுடன் எதிர்பார்க்க உள்ளேன்.
ஆகவே, தேவையற்ற ஊகங்களைத் தவிர்த்து, சட்ட நடைமுறைகளுக்கு மரியாதை செலுத்துமாறு பொதுமக்களையும் ஊடகங்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.