கனடா முழுவதும் குற்றங்களை கட்டுப்படுத்த ஒட்டாவாவில் புதிய நடவடிக்கைகளை அறிவித்துக்கொண்டிருக்கின்ற இவ் வேளையில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான வன்கூவரில் தற்போது பணம் பெறும் நோக்கில் குடியிருப்பாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களை மிரட்டும் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன.
வன்கூவர் காவல் துறைத் திணைக்களம்[Vancouver Police Department (VPD)] கடந்த புதன்கிழமை வெளியிட்ட தகவலின்படி, தற்போது முதல் நான்கு மிரட்டல் வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்குகள் குறித்து காவல்துறை மிகக் குறைந்த தகவல்களையே தற்போது வெளியிட்டுள்ளது.
மேற்படி வழக்குகள் எப்போது பதிவு செய்யப்பட்டன என்பதையும் வன்கூவர் காவல் துறை வெளிப்படுத்தவில்லை. ஆனால், சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வான்கூவரில் வசிப்பவர்கள் என்றாலும், அவர்கள் நடத்தும் தொழில்கள் Fraser Valley பகுதியில் அமைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்கூவரில் இதற்கு முதலும் இதுபோன்ற குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கக்கூடும் எனவும் காவல்துறை தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.