தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கி தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் ஈடுபட தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் ஆயர்களும், குருமுதல்வர்களும் அடங்கிய வடக்கு – கிழக்கு ஆயர் மன்றக்கூட்டம் பங்குனி மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய பங்கு மனையில் நடைபெற்றுள்ளது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கடந்த கால செயற்திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டு எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.
எதிர்கால செயற்பாடுகளில் குறிப்பாக தமிழ் மக்களின் நன்மை கருதி தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் வடக்கு – கிழக்கு ஆயர் மன்றம் ஈடுபடுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம், மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை மறைமாவட்ட குருமுதல்வர்கள் கலந்துகொண்டுள்ளனர்.