1974 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு தற்போது கனடாவை தலைமையாகக் கொண்டு இந்தியா, ஜெர்மன், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, டென்மார்க், மொரிசியஸ் உட்பட 30 நாடுகளுக்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) சர்வதேச பொதுச் செயலாளர் நாயகம் துரை கணேசலிங்கம் இன்று (20) திகதி இலங்கைக்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடம் லண்டன் மாநகரில் இடம் பெறவுள்ள இயக்கத்தின் 50 ஆவது சர்வதேச மாநாடு தொடர்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அவர் இலங்கை கிளையினருடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வருகின்ற பொதுச் செயலாளர் நாயகம் இலங்கையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரையும் சந்தித்து உரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் செயலாளர் நாயகத்துடன் லண்டன் மாநகரிலிருந்து இயக்கத்தின் லண்டன் மாநகர் பிரமுகர் சட்டத்தரணி அடைக்கலமுத்து இளஞ்செழியனும் இலங்கை வரவுள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் இலங்கை கிளை தலைவர் சத்யானந்தன், செயலாளர் எம். பிரசாந்தன், தேசிய அமைப்பாளர் தே. செந்தில்வேலவர் ஆகியோடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் யாழ் ஊடக மையத்தில் விசேட பத்திரிகையாளர் மாநாடு ஒன்றையும் நடத்த உள்ளனர்.
இவர்களது வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் சில விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.