ஈரானில் நிலவும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர் ஒருவர் தூதரகத்தின் மேல் தளத்தில் ஏறி ஈரான் தேசியக் கொடியைக் கிழித்தெறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு முன்பாக சனிக்கிழமை திரண்ட போராட்டக்காரர்கள், ஈரான் அரசாங்கத்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதுடன் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அவசரப்பிரிவு ஊழியர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 1979ஆம் ஆண்டு ஈரானில் புரட்சியின் போது வெளியேற்றப்பட்ட ஈரானின் கடைசி மன்னரான மொஹமட் ரேஸா ஷா பஹ்லவியின் மகன், ரேஸா பஹ்லவியின் படங்களைத் தாங்கியிருந்தனர்.
ஈரானில் பாதுகாப்புப் படையினரால் போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கு பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் ஜேர்மனி ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் ஆகியோர் தமது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஈரான் அரசாங்கம் தனது நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டும். அச்சுறுத்தல்களின்றி அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் கருத்துத் தெரிவிப்பதற்கும் இடமளிக்க வேண்டும்” என அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.