பாகிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் ஆகியவற்றுக்கான இரண்டு இலங்கை கிரிக்கெட் குழாம்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டது.
அணித் தலைவர் சரித் அசலன்க உட்பட 11 வீரர்கள் இந்த இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இலங்கையின் ரி20 கிரிக்கெட் அணிக்கு முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க உப தலைவராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் பானுக்க ராஜபக்ஷவுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்தில் முதலில் பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மூன்று போட்டிகளும் ராவல்பிண்டியில் நவம்பர் 11, 13, 15ஆம் திகதிகளில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான், ஸிம்பாப்பே ஆகிய அணிகளுடன் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை விளையாடும்.
இந்த இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை குழாம்களில் சரித் அசலன்க, பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், காமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, அசித்த பெர்னாண்டோ, ஏஷான் மாலிங்க ஆகிய 11 பேர் இடம்பெறுகின்றனர்.
அவர்களுடன் லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, பவன் ரத்நாயக்க, ஜெவ்றி வெண்டர்சே, ப்ரமோத் மதுஷான் ஆகியோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்திலும் குசல் பெரேரா, தசுன் ஷானக்க, பானுக்க ராஜபக்ஷ, துஷான் ஹேமன்த, நுவன் துஷார ஆகியோர் சர்வதேச ரி20 குழாத்திலும் இடம்பெறுகின்றனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் குழாத்தில் ஏற்கனவே பெயரிடப்பட்டிருந்த டில்ஷான் மதுஷன்க முழங்காலில் ஏற்பட்ட உபாதையிலிருந்து மீளாததால் அவருக்குப் பதிலாக ஏஷான் மாலிங்க இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஏஷான் மாலிங்க சரவ்தேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும் சர்வதேச ரி20 போட்டிகளில் அவருக்கு இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேபோன்று சர்வதேச ரி20 கிரிக்கெட் குழாத்தில் ஏற்கனவே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்த மதீஷ பத்திரண உபாதையிலிருந்து மீளாததால் அவருக்குப் பதிலாக அசித்த பெர்னாண்டோ இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
முதலிரண்டு ரி20 போட்டிகள் ராவல்பிண்டியில் நவம்பர் 17, 19ஆம் திகதிகளில் நடைபெறும். இறுதிப் போட்டி உட்பட மற்றைய போட்டிகள் லாகூரில் நடைபெறும்.