அமமுக – பாஜக கூட்டணி குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் தீவிர விவாதம் நடைபெற்று வருகிறது. என்டிஏ அல்லது தவெக என்ற இரண்டு வாய்ப்புகள் முன் டிடிவி தினகரன், ஓபிஎஸ் நிற்கும் நிலையில், கூட்டணி அரசியல் சூடு பிடித்துள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) என்பது தமிழ்நாட்டில் 2018 ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் தலைமையில் தொடங்கப்பட்டது. அதிமுகவில் இருந்த அவர் அங்கு ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக அமமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு அமமுக செயல்பட்டு வருகிறது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024 மக்களவைத் தேர்தல்களில் அமமுக போட்டியிட்டு, தன்னுடைய அரசியல் அடையாளத்தை நிலைநிறுத்த முயன்றது.
அமமுக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கீரின் சிக்னல் காட்டியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
அதேநேரத்தில், தவெக உடனும் அமமுக பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அண்மையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் டிடிவியுடன் பேசி வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி என்டிஏ கூட்டணி சார்பில், கூட்டணி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மேடையில் டிடிவி ஏறுவாரா? இந்த கேள்வி தான் தமிழக அரசியலில் அடுத்த சில தினங்களுக்கு விவாதிக்கப்படக் கூடிய விவாத பொருளாக உருவெடுத்துள்ளது.