நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை 99,000-ஐத் தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த நடவடிக்கையின் ஊடாக 137 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் 1,973 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவுகளைப் பெறவும், 1,639 பேரை புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்த சுற்றிவளைப்புகளின் போது 524 கிலோ 906 கிராம் ஹெரோயின் மற்றும் 1,416 கிலோ 41 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை தவிர 11 கிலோ 674 கிராம் கொக்கேய்ன், 199 கிலோ 864 கிராம் குஷ் போதைப்பொருள், 121 கிலோ 962 கிராம் ஹஷீஸ் மற்றும் 932,976 போதைப்பொருள் மாத்திரைகள் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 100,247 சுற்றிவளைப்புகளின் ஊடாக இந்த சந்தேகநபர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, நேற்றைய தினம் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் கீழ் 764 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
766 சுற்றிவளைப்புகளின் ஊடாகவே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைத் தொடரின் கீழ் நேற்றைய (19) தினமும் பல சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த நடவடிக்கையின் கீழ் 552 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 259 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 164 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 289 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 55 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 3,997 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் இதன்போது நடவடிக்கை எடுத்துள்ளனர்.