எமது நாட்டில் முழுமையான வசதிகளுடன் கூடிய நீதிமன்ற வளாகங்கள் இல்லை. மேலும் நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகள் இன்று -நேற்று உருவானவை அல்ல, கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினைகள் என நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மாத்தறை கோட்டவில நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற, மாத்தறை நீதிமன்ற வளாகத்தின் அடிப்படை வசதி தேவைகள் குறித்து மாத்தறை வழக்கறிஞர் சங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நீதியமைச்சில் மட்டுமல்ல ஏனைய அமைச்சர்களுடன் கலந்துரையாடுகையில் பல பிரச்சினைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்க வேண்டிய சவால்களாக உள்ளன.
நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களாக 6,021 பேரு்ககான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
தற்போதைய பொருளாதார நிலைமையையும் பொருட்படுத்தாமல், அவற்றில் சுமார் 1,800 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் நாம் செயல்பட வேண்டியுள்ளது. கடந்த அரசுகளைப் போல பணத்தை அச்சடிக்க முடியாது.
நிலையான முறையில் சவால்களை சமாளித்து, படிப்படியாக பிரச்சினைகளை விவாதித்து முன்னேற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.