குவாஹாட்டி, பர்சாபரா கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை (29) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்தை நொக்-அவுட் செய்த தென் ஆபிரிக்கா, முதாலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இந்தப் போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தென் ஆபிரிக்கா 125 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
அணித் தலைவி லோரா வுல்வார்ட் குவித்த அபார சதம், மாரிஸ்ஆன் கெப் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
மேலும் 2017இலும் 2022இலும் அரை இறுதிகளில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விகளுக்கு இம் முறை தென் ஆபிரிக்கா சரியான பதிலடி கொடுத்து அந்தத் தோல்விகளை நிவர்த்திசெய்துகொண்டது.
இப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு அனுகூலமான அணி என கருதப்பட்ட இங்கிலாந்துக்கு நெட் சிவர் – ப்றன்ட் முதலில் களத்தடுப்பில் ஈடுபட எடுத்த முடிவு தவறு என்பதை புரிந்துகொள்ள வெகுநேரம் செல்லவில்லை.
தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டும் தஸ்மின் ப்றிட்ஸும் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
எவ்வாறாயினும் இரண்டு சந்தர்ப்பங்களில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த தென் ஆபிரிக்காவை வீழ்ச்சியிலிருந்து மீட்ட பெருமைலோரா வுல்வார்டையே சாருகிறது.
தஸ்மின் ப்றிட்ஸ் 45 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவரது விக்கெட் உட்பட 3 விக்கெட்கள் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. (119 – 3 விக்.) இதனைத் தொடர்ந்து லோரா வுட்வார்டும் மாரிஸ்ஆன் கெப்பும் இணைந்து 4ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
துடுப்பெடுத்தாடிய லோரா வுல்வார்ட் 7ஆவது விக்கெட்டில் க்ளோ ட்ரையொனுடன் மேலும் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டு 48ஆவது ஓவரில் களம் விட்டகன்றார்.