‘இயக்குநராகவும் , நடிகராகவும் வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன் மீண்டும் சௌந்தர்யா ரஜினிகாந்த் – மகேஷ் ராஜ் பஸ்லியான்- நான் ஆகியோர் புதிய படத்தில் இணைய உள்ளோம்’ என நடிகரும் இயக்குநருமான அபிஷன் ஜீவந்த் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவந்த் – அனஸ்வரா ராஜன் ஜோடியாக நடித்த ‘வித் லவ்’ எனும் திரைப்படம் வெளியாகி, ரசிகர்களாலும் விமர்சவர்களாலும் பாராட்டப்பட்டு, வெற்றிகரமாக படமாளிகைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரத்யேக நிகழ்வு ஒன்றை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர்.
படக் குழுவினர் பங்கு பற்றி இருந்த இந்நிகழ்வில் இயக்குநரும், நடிகருமான அபிஷன் ஜீவந்த் பேசுகையில், ” நான் ஹீரோவாக முடிவெடுத்ததற்கும், நம்பிக்கை வைத்ததற்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை தான் காரணம். தற்போது அவரை சந்திக்கும் போது அவர் சொன்ன வார்த்தை எம்மை மேலும் உற்சாகமாக்கியது.
இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் நாங்கள் புதிய படத்தில் ஒன்றிணைய உள்ளோம். எம்முடைய இந்தப் பயணத்தில் உடன் இருந்த அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி” என்றார்.