மியன்மாரின் மியாவாடி பகுதியில் உள்ள இணையக் குற்றச் முகாம்களில் மனிதக் கடத்தலுக்கு உள்ளாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டலில், பேங்கொக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் மியன்மாரிலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியன இணைந்து இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தன.
தாய்லாந்து அதிகாரிகளின் நேரடி ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் விஜயந்தி எதிரிசிங்க மற்றும் தூதரக அதிகாரிகள், தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு, சமூக மேம்பாட்டு அமைச்சு, தேசிய பாதுகாப்புச் சபை மற்றும் குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் தீவிரமாகச் செயற்பட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் தாய்லாந்து எல்லை வழியாக பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டு,அங்கிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த மனிதாபிமான நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இலங்கைத் தூதரகம் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.