ஞாயிற்றுக்கிழமை காலை மிசிசாகாவில் (Mississauga) காவல்துறை அதிகாரி ஒருவரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் பிராம்ப்டனைச் (Brampton) சேர்ந்த நபர், நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே பல துப்பாக்கித் தடைகளுக்கு உள்ளானவர் என்று பீல் பிராந்திய காவல்துறை (PRP) அடையாளம் கண்டுள்ளது.
பீல் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மூலோபாய மற்றும் தந்திரோபாய அமலாக்கக் காவல்’ (Strategic and Tactical Enforcement Policing) குழுவினர் டொர்ப்ராம் வீதி (Torbram Road) பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முகமூடியைத் தனது தாடையில் அணிந்திருந்த சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர், அருகிலுள்ள வணிக வளாகத்திலிருந்து தப்பியோடி பல வேலிகளைத் தாண்டிக் குதிப்பதைக் கண்டனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, அந்த சந்தேக நபர் டொர்ப்ராம் வீதியில் தெற்கு நோக்கி நடந்து செல்வதை அதிகாரி ஒருவர் கண்டறிந்தார். “அதிகாரி அவரிடம் பேச முயன்றபோது, சந்தேக நபர் தப்பியோடினார். அப்போது துரத்திச் சென்ற அதிகாரி நோக்கி, சந்தேக நபர் திடீரென திரும்பி பலமுறை துப்பாக்கியால் சுட்டார், ஆனால் அதிர்ஷ்டவசமாக குண்டுகள் பாயவில்லை,” என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து கூடுதல் அதிகாரிகள் விரைந்து வந்து அவரை உடனடியாகக் கைது செய்தனர்.
இன்று காலை 9:30 மணியளவில் CP24 செய்திச் சேவைக்கு வழங்கப்பட்ட முதற்கட்ட தகவல்களில், அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதும், அதிகாரி காயமின்றித் தப்பியதும் உறுதிப்படுத்தப்பட்டது. சந்தேக நபருக்கு எவ்வாறான காயம் ஏற்பட்டது அல்லது பதிலுக்குப் போலீசார் சுட்டார்களா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
மேலும் இரண்டு அதிகாரிகள் காயம்: இந்தச் சம்பவத்தின் போது மேலும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் போலீசார் பின்னர் வெளிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து காவல்துறை அதிபர் நிஷான் துரையப்பா (Police Chief Nishan Duraiappah) விடுத்துள்ள அறிக்கையில், “நமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தங்களின் உயிரைப் பணயம் வைத்து முன்வரிசையில் பணியாற்றும் அதிகாரிகள் தினமும் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது. அதிகாரிக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாததையிட்டு நாங்கள் நிம்மதியடைகிறோம். இவ்வாறான தொடர் வன்முறைத் குற்றவாளிகளை சிறப்பாகக் கையாள்வதற்கும், சமூகத்திற்கான ஆபத்தைக் குறைப்பதற்கும் கடுமையான பிணை (bail) மற்றும் தண்டனைச் சட்டங்களை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மரணம், கடுமையான காயம் அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களின் போது விசாரணைகளை மேற்கொள்ளும் ஒன்டாரியோவின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU), இந்த விவகாரத்தை விசாரிக்கவில்லை என்று பீல் காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபரின் விபரங்கள் மற்றும் துப்பாக்கித் தடைகள்: கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிராம்ப்டனைச் சேர்ந்த 24 வயதுடைய இசையா பச்சூ (Isaiah Bachoo) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மருத்துவ ரீதியாகக் குணமடைந்துள்ளதாகக் கூறி போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.
அவர் மீது ‘தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டமை’ மற்றும் ‘தடைசெய்யப்பட்ட அல்லது கட்டுப்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை’ ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது குறித்து அரச தரப்பு சட்டத்தரணியுடன் (Crown Attorney) போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பச்சூ மீது, 2023 ஆம் ஆண்டு தண்டர் பே (Thunder Bay) பகுதியில் நடந்த துப்பாக்கி தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தடைசெய்யப்பட்ட துப்பாக்கிகள் அல்லது வெடிமருந்துகளை வைத்திருக்க ஆயுட்காலத் தடையும், சாதாரண துப்பாக்கிகளை வைத்திருக்க 10 ஆண்டுகாலத் தடையும் நீதிமன்றத்தால் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீதி மூடல்கள் மற்றும் விசாரணை: போலீசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதால், டொர்ப்ராம் வீதி மற்றும் டெரி வீதி கிழக்கு (Derry Road East) பகுதிகளில் நீண்ட நேர வீதி மூடல்கள் அமலில் இருக்கும் என எக்ஸ் (X) தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விபரங்கள் தெரிந்தவர்கள் 31 ஆவது பிரிவு குற்றவியல் புலனாய்வுப் பணியகத்தை (ext. 2133) அல்லது க்ரைம் ஸ்டாப்பர்ஸ் அமைப்பைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.