”நாங்கள் தற்குறி அல்ல; ஆச்சர்யக்குறி. மாற்றத்துக்கான அறிகுறி,” என காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் பேசினார்.
காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: நாட்டிற்காக உழைப்பதற்காகவே அண்ணாதுரை பிறந்தார். பொதுநலத்தில் தான் நாள் முழுவதும் கண்ணாக இருந்தார் என்று எம்ஜிஆர் பாட்டு ஒன்று பாடி இருக்கிறார். அதனை கேட்டு இருப்பீங்க, அப்படிப்பட்ட காஞ்சி தலைவர் அண்ணாதுரை பிறந்த மாவட்டம் தான் காஞ்சிபுரம் மாவட்டம்.
தன்னுடைய வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அண்ணாதுரை படத்தை வைத்தவர் எம்ஜிஆர். ஆனால் அண்ணாதுரை ஆரம்பித்த கட்சி அதன் பிறகு கைப்பற்றியவர்கள் என்ன எல்லாம் பண்ணுகிறார்கள். நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா என்ன மக்களே? உங்களுக்கு தான் அது நல்லா தெரியுமே?
முதல் களப்பயணம் தொடங்கியது பரந்தூரில் இருந்து தான். இன்றைக்கு மன வேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்து இருப்பது காஞ்சிபுரம் மாவட்டம் தான். மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாதுரையை மறந்தது யார்?
மக்களுக்காக சட்டபூர்வமாக எல்லா நல்லவற்றையும் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த மக்களுக்காக செய்ய வேண்டும். அந்த ஒரே லட்சியத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளோம். கொள்கை என்ன கிலோ என்ன, விலை என்ன கேட்கிற அளவுக்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சமத்துவம் சம வாய்ப்பு என்று கூறும் எங்களுக்கு கொள்கை இல்லை என்கிறார் முதல்வர்.
மக்களின் பிரச்னை குறித்து பேச தான் இங்கு வந்து இருக்கிறோம். இந்த மக்களின் ரத்தத்துடன் பாலாறு சேர்ந்து ஓடுகிறது, இந்த ஆற்றினை அழித்து விட்டார்கள். மணலை கொள்ளை அடித்து இருக்கிறார்கள், இதில் ரூ.4730 கோடி மதிப்புள்ள மணல் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இதற்கான ஆதாரம் கோர்ட், அமலாக்கத்துறையிடம் இருக்கிறது.
நம்ம ஆட்சிக்கு வந்தால், அது என்ன வந்தால், வருவோம். மக்கள் கண்டிப்பாக நம்மளை வர வைப்பாங்க, மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்க தானே செய்வாங்க, அப்படி மக்களால் அமைக்கப்பட ஆட்சியில் என்ன செய்ய போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் விளக்கமாக கொடுப்போம். அதற்கு முன், நான் சிறியதாக கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.