மன்னார் நகர சபையின் நிரந்தரச் சேமிப்புக் கணக்கிலிருந்து 100 மில்லியன் ரூபாய் (10 கோடி) நிதி ஒதுக்கீட்டில், மன்னார் வைத்தியசாலையில் நவீன ரக வெளிநோயாளர் பிரிவு (OPD) ஒன்றை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நகர சபைத் தலைவர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையில் இன்று (20) வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
“மன்னார் வைத்தியசாலைப் பணிப்பாளர், அபிவிருத்திக் குழு மற்றும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, 10 கோடி ரூபாய் நிதியை வழங்கத் தீர்மானித்துள்ளோம். தனியார் வைத்தியசாலைகளுக்கு நிகரான வசதிகளுடன் கூடிய இந்த நவீன வெளிநோயாளர் பிரிவில், அவசர அறுவை சிகிச்சைக் கூடம், இரத்த வங்கி மற்றும் மருந்து விநியோகக் கவுண்டர்கள் அமையவுள்ளன.
இந்தத் தீர்மானத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான பார்த்திபன் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்தனர். வீதி மற்றும் கால்வாய் அபிவிருத்திகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர்கள் வாதிட்டனர். இருப்பினும், மக்களின் சுகாதாரத் தேவையை முன்னிறுத்தி இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவளித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
சபையின் ஏனைய முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள்: நகர சபைப் பிரிவுக்குள் சுமார் 42 கோடி ரூபாய் (420 மில்லியன்) செலவில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன:
விளையாட்டுத் துறை: பொது விளையாட்டு மைதானத்தில் புதிய அரங்கு மற்றும் உடற்பயிற்சி நிலையம் அமைக்க 3 கோடி ரூபாய்.
கட்டமைப்பு: நகர மண்டபத்தை நவீனமயமாக்க 5.5 கோடி ரூபாய் மற்றும் புதிய பொதுச் சந்தை அமைக்க 6 மில்லியன் ரூபாய்.
மக்களின் நேரடித் தேவை: இதற்கென 9.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீதிப் புனரமைப்பு: 1.5 கோடி ரூபாய் செலவில் 3 வீதிகள் புனரமைக்கப்படும். அத்துடன் மத்திய அரசால் தரவன்கோட்டை-கீரி வீதிக்கு 7.69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி: நகர எல்லைக்குள் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் 50 ஆசிரியர்களுக்கு தலா 10,000 ரூபாய் வீதம் மாதாந்தக் கொடுப்பனவு வழங்க தீர்மானம்.
மன்னார் நகரில் பொலித்தீன் பயன்பாட்டைத் தடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாகத் தாமரை, வாழை மற்றும் தேக்கு இலைகளைப் பயன்படுத்துமாறு கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அனுமதியற்ற முறையில் கட்டப்பட்ட 178 கட்டடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி மற்றும் குடிபுகு சான்றிதழ் இன்றிச் செயற்படும் காற்றாலை நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர் எச்சரித்தார்.
ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் தவிசாளரால் சுமார் 54 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக அவரது சகோதரிக்கு வழங்கப்பட்ட கடை மூலம் 1 மில்லியன் ரூபாய் ஊழல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஊழல் ஒழிப்புப் பிரிவு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.