த்த மதத்தின் தூண்களாகக் கருதப்படும் பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள் மற்றும் உபாசிகைகள் ஆகியோரின் அடிப்படையை சிதைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தவறான கொள்கை கொண்ட சக்திகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அதன் ஒருங்கிணைப்பாளர் எலபத்கம ஞானரத்தன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
எமது கலாசாரத்தின் அடிப்படைத் தத்துவங்களுடன் ஒன்றிணைந்துள்ள பௌத்த கட்டமைப்பை சிதைத்து, அதனை முற்றாக அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, அண்மையில் உடுமளுவ விகாரையின் தலைமை தேரர் தொடர்பில் இடம்பெற்ற சம்பவத்தை மையப்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் சில, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிக்குகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. இது பௌத்த சாசனத்துக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், சங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையாளும் வகையில், சங்க சொத்துக்கள் பராமரிப்புச் சபை என்ற பெயரில் புதிய குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை ஒன்றைக் காண முடிகிறது. 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தின் கீழ் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ளன. இவற்றை மீறி, சங்கத்தின் சொத்துக்களை பராமரிப்புச் சபையிடம் ஒப்படைத்து, அவற்றை இல்லறத்தவர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க முயற்சிப்பது ஒரு பாரிய சதித்திட்டமாகும்.
பொலன்னறுவை நிசங்கமல்ல மன்னர் காலத்தில், சங்க சொத்துக்களை இல்லறத்தவர் பயன்படுத்தினால், அவர்கள் நாய் மற்றும் காகங்களாகப் பிறப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுக்கள் எமது கலாசார விழுமியங்களை எடுத்தியம்புகின்றன. அத்தகைய சொத்துக்களை இல்லறத்தவர் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளுவது பாரிய பிழையாகும்.
சங்க சொத்துக்கள் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின், முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்று உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, இவ்வாறான சதித்திட்டங்களை முன்னெடுப்பது சாசனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எமது நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும். பிக்குகள் குற்றவாளிகள் என இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சில சக்திகள் அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து சமூக மட்டத்தில் அவமானப்படுத்துகின்றன.
1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தி சாசனத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. எனவே, ஜனாதிபதி மற்றும் பௌத்த சாசன அமைச்சின் பொறுப்பிலுள்ள அதிகாரிகள், பௌத்த மரபுரிமைகளையும் சாசனத்தையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், புகழ்பெற்ற பௌத்த பாடசாலைகளை மதச்சார்பற்றதாக்கும் மறைமுகமான சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. காட்டை அழிப்பதற்கு அதே காட்டிலுள்ள மரத்தையே பயன்படுத்துவது போல, பிக்குகளையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சாசனத்தை அழிக்க முனையும் தவறான சக்திகளின் வலைகளில் எமது இளம் பிக்குகள் சிக்கி விடக்கூடாது.
எனவே, அனைத்து சங்கத்தினரும் சாசனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றிணைய வேண்டும் எனவும், இளம் பிக்குகள் இவ்வாறான சதித்திட்டங்களைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும் முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.