ஊடகங்களில் பொய்யை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று ஊடகங்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களின் ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வலுசக்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
அரசாங்கத்தின் மோசடிகளை சுட்டிக்காட்டும் போது ஆளுங்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் மீது முன்வைக்கிறார்கள். அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று வியாழக்கிழமை (20) சபையில் ‘பத்தர விஸ்தர’ நிகழ்ச்சியை நிகழ்த்தினார்.
ஊடகங்களில் பொய்யுரைத்து தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதி பல வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் எந்த வாக்குறுதிகளும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.போலியான வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களின் ஆற்றாமையையே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆகவே ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாகவும், வாழ்க்கைச் செலவுகளை குறைப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.இந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை நாங்கள் நினைவூட்டும் போது அரசாங்கம் எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது.
மின்கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்திய திட்டங்களே தற்போது செயற்படுத்தப்படுகிறது. ஆகவே போலியான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றினோம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.