மெக்சிகோவினால் தேடப்பட்டு வந்த மிக முக்கியமான போதைப்பொருள் கடத்தல் தலைவனும், ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்’ (CJNG) என்ற கடத்தல் கும்பலின் தலைவனுமான நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் (Nemesio Oseguera Cervantes) பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
“எல் மென்சோ” (El Mencho) என்று பரவலாக அறியப்படும் இவர் கொல்லப்பட்டதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு:
மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்திலுள்ள தபால்பா (Tapalpa) நகரில் “எல் மென்சோ” மறைந்திருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இராணுவத்தினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது இராணுவத்தினருக்கும் போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது.
இந்த மோதலில் எல் மென்சோவின் ஆதரவாளர்கள் நால்வர் கொல்லப்பட்டனர். மூன்று இராணுவத்தினர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த எல் மென்சோ, மேலதிக சிகிச்சைக்காக தலைநகர் மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்லப்படும் வழியில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இந்த விசேட தேடுதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா வழங்கிய புலனாய்வுத் தகவல்கள் பெரும் உதவியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எல் மென்சோவை கைது செய்ய உதவுபவர்களுக்கு அமெரிக்கா பல மில்லியன் டொலர்களை வெகுமதியாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CJNG கும்பல் தலைவன் “எல் மென்சோ” கொல்லப்பட்ட செய்தியையடுத்து CJNG கும்பலின் உறுப்பினர்கள் மெக்சிகோவின் எட்டு மாநிலங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
வீதிகளில் வாகனங்களுக்குத் தீ வைத்தும், வீதித் தடைகளை ஏற்படுத்தியும் பாதுகாப்புப் படையினர் மீது அவர்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் மெக்சிகோவின் பல பகுதிகளில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது.