ல்லிணக்கப் பொறிமுறையை வலுப்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் அனைத்து இனம், மதம், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெள்ளிக்கிழமை (13) கொழும்பு நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்த போதே இதனை வலியுறுத்தியுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் வழியாக எவ்வளவு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், பயணம் சரியானதாக இருந்தால், பொறுமையுடன் இருந்தால், அவற்றை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒரு நாள் உண்மை வெற்றி பெறும். நான் உறுதியாக நம்புவது போல உண்மை வெற்றி பெறும்.
அன்று ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக பழிக்கு பழி வாக்கெடுப்பு கொண்டு வந்த தருணத்தில் ஆதரவாக நின்றது முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தான். அன்று முதல் நான் மகா சங்கத்தினரையும் மத தலைவர்களையும் மதிக்கின்றேன். அது ஒருபோதும் மாறாது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் (ICCPR) கீழ் மதங்களையும் மத தலைவர்களையும் மையமாகக் கொண்டு வெறுப்பை பரப்பும், சமரசத்தை சிதைக்கும் கூற்றுக்களை தடுக்க வேண்டும். அதற்கும் மேலாக நாட்டின் ஒற்றுமையையும் கூட்டுறவையும் பாதுகாக்கும் பொறுப்பை ஜனாதிபதி ஏற்று, அனைத்து மதங்கள், மக்கள் பிரிவுகள், கட்சிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட சபை ஒன்றை நிறுவி, அதன் மூலம் இந்த பிரச்சனைகளை கலந்து பேச வேண்டும். இனவாதம், மதவாதம், வர்க்க பாகுபாட்டை உண்டாக்க அனுமதிக்க முடியாது.
அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளவாறு புத்த சாசனத்தை பாதுகாப்பதோடு, ஏனைய மதங்கள் மற்றும் இனங்களையும் பாதுகாக்க செயல்பட வேண்டும். இந்த இரண்டாம் அத்தியாயத்தில் குறிப்பிட்ட விடயங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை. அரசியலமைப்பின் இரண்டாம் அத்தியாயத்தின்படி மகா சங்கத்தினரை அவமதிக்க முடியாது. இது குறித்து பாராளுமன்றத்திலும் நாம் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றோம்.
அன்று புத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளித்து, புத்த சாசன அமைச்சு ஒன்றை நிறுவி மற்ற மதங்களுக்கு இராஜாங்க அமைச்சு ஒன்றை உருவாக்கினாலும், இப்போது அது இல்லாதிருப்பதும் ஒரு பிரச்சினையாகும். பிக்குகளை அவமதிக்கும் செயல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் புத்த சாசன அமைச்சின் கீழ் தூரத்தில் உள்ள தேரர்களுக்காக தனியே தர்ம சாலைகள் அமைக்கப்பட்டன. இப்போது அது எதுவும் நடைபெறவில்லை. இது வருத்தமான விடயமாகும் என்றார்.