கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு வேலைக்காக அமர்த்தப்படும் நபர்களால் தங்கம் மற்றும் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதன்படி, சில நபர்கள் திட்டமிட்ட முறையில் வசதி படைத்த வீடுகளை இலக்கு வைத்து, தமது குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர்.
குறுகிய காலத்திலேயே வீட்டு உரிமையாளர்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, பின்னர் திருட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு சில ஆலோசனைகளை பொலிஸார் வழங்கியுள்ளனர்.
அதன்படி, வேலைக்கு அமர்த்தும் நபரின் தேசிய அடையாள அட்டையின் தெளிவான நிழற்படப் பிரதியை பெற்றுக்கொண்டு, அதன் அசலை ஒப்பிட்டு உறுதிப்படுத்தவும்.
பணியாளரின் நிரந்தர மற்றும் தற்காலிக வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட நற்சான்றிதழ் அல்லது பொலிஸ் அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கோரவும்.
பணியாளரின் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளவும்.
வீட்டில் உள்ள தங்கம், பணம் மற்றும் பெறுமதியான ஆவணங்களை எப்போதும் பாதுகாப்பான இடங்களில் வைக்கவும்.
வீட்டுப் பணியாளர்களை வீட்டில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும். அவ்வாறு செல்ல நேரிட்டால், பெறுமதியான பொருட்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்.
அத்துடன், வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களின் பிரதிகளை, உங்கள் பகுதிக்குரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பண மற்றும் சொத்து இழப்புகளைத் தவிர்க்க முடியும் என இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.