சுகாதாரத்துறை எதிர்கொண்டுவரும் பிரச்சினைக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முன்வராவிட்டால், சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து பாரிய தொழிந்சங்க போராட்டத்துக்கு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தாதியர்களின் சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை (29) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரச வைத்தியர் அதிகாரிகள் காரியாலயத்தில் இன்று வைத்திய தொழிற்சங்கங்களின் சந்திப்பொன்று இடம்பெற்றது. சுகாதார தொழிற்சங்கங்கள் பாரியளவில் செயலிழந்து வருவது தொடர்பாகவும் மக்களின் சுகாதார சேவைகள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. அதேபோன்று சுகாதார பணிக்குழாத்திலும் பாரிய பிரச்சினைகள் தலைதூக்கி வருகிறது. இந்த விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராயவே இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சுகாதாரத்துறையில் இடம்பெற்றுவரும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதை சுகாதார அமைச்சர் வழிவிட்டு செல்கிறார். அதேபோன்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரும் இதுதொடர்பில் கலந்துரையாடி தீர்வுகாணாமல் காலத்தை வீணடித்து வருகின்றனர். சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லாமையே இதற்கு காரணமாகும்.
அதேநேரம் தற்போதைய சுகாதார அமைச்சரின் அனுமதியுடன் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள பல மருந்துப்பொருட்கள் பாவனைக்கு கூடாது. தரம் குறைந்தது என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.அதன் பிரகாரம் தற்போது பல மருந்துப்பொருட்களை தடை செய்திருக்கின்றன. இவ்வாறு தடை செய்யப்பட்டிருக்கும் மருந்துப் பொருட்களுக்கு மாற்று மருந்து பொருட்களை சுகாதார அமைச்சராே சுகாதாரத்துறையோ அறிவிப்பு செய்வதும் இல்லை.
அதேபோன்று வைத்தியசாலைகளில் பாரியளவில் வைத்திய உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இருந்துவருகிறது. சத்திரசிகிச்சைக்கு தேவையான உபகரணங்களுக்கு பற்றாக்குறை இருந்து வருவதால், சத்திர சிகிச்சைக்கு வருபவர்கள் இலட்சக்கணக்கில் பணம் எடுத்துவர வேண்டி இருக்கிறது. தேவையான உபகரணங்களை அவர்கள் வெளியில் இருந்தே பெற வேண்டி இருக்கிறார்கள். அத்துடன் சுகாதார சேவைக்கு ஆட்களை புதிதாக இணைத்துக்கொள்வதில்லை. அதனால் சுகாதார துறையின் அனைத்து துறைகளும் செயலிழந்து காணப்படுகின்றன. சேவையை மேற்கொள்ள போதுமான ஊழியர்கள் இல்லை.
அதேநேரம் இந்த காலப்பகுதிக்குள் 2500க்கும் மேற்பட்ட தாதிய அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ஊழியர்களின் பற்றாக்குறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தாதியர்கள் இல்லாமை காரணமாக சில வைத்தியசாலைகளை திறக்க முடியாமல் இருக்கின்றன. அதேபோன்று தாதியர்கள் இல்லாத வைத்தியசாலைகளும் இருக்கின்றன. சுகாதார ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளும் வழங்கப்படுவதில்லை. இதனால் ஊழியர்களும் சரியான சேவையை வழங்குவதற்கு பின்வாங்கி வருகிறார்கள்.
இவ்வாறு வைத்தியசாலைகளில் உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கு இருந்துவரும் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளர்களுடன் ஊழியர்களே முரண்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான பிரச்சினைக்கு தீர்வுகாண சுகாதார அமைச்சர் தயார் இல்லை. அரசாங்கமும் தயார் இல்லை பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை. அதனால் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சுகாதார தாெழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரிய தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம் அவ்வாறானதொரு நிலைக்கு செல்லாமல் அரசாங்கம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார்.