பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஒன்றியங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரைகள் புலம்பெயர் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டமைக்கு நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதிநிதி கருப்பையா ராமகிருஷ்ணன் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளவை:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டுக்கு அமைதியைப் பெற்றுக்கொடுத்தார் என்பதை நாம் பாராட்ட வேண்டும். இன்று இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பழைய காயங்களை மீண்டும் கிளறி இனவாதத்தைத் தூண்டக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
யுத்த காலத்தில் மலையகத் தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்தனர் என்பதை ராமகிருஷ்ணன் நினைவு கூர்ந்தார். “அன்று அடையாள அட்டை இல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை இருந்தது. அச்சத்துடனேயே பெரும்பாலான நேரங்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். ஆனால் இன்று அந்த நிலை முற்றாக மாறியுள்ளது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான அபிவிருத்திப் பணிகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன. அனைத்துப் புலம்பெயர் தமிழர்களையும் நான் குறைகூறவில்லை, ஆனால் ஒரு சில குழுக்கள் தமது சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
கருத்துச் சுதந்திரத்தைப் போற்றும் ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள், இவ்வாறான போராட்டங்கள் ஒட்டுமொத்த மக்களின் கருத்தா அல்லது ஒரு சிறு குழுவின் கைவரிசையா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணிவது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்று அவர் மேலும் தெரிவித்தார்.