கடவத்தை – இஹல பியன்வில பகுதியில் பிறந்தநாள் நிகழ்வின் போது ஏற்பட்ட மோதலில், 54 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைது செய்துள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபர் கடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் தனது சகோதரனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் வன்முறையாக மாறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, இரண்டு நபர்கள் கூர்மையான ஆயுதங்களால் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில், பாதிக்கப்பட்ட நபர் கொடூரமான முறையில் காயமடைந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி 54 வயதுடைய நபர் உயிரிழந்தார்.
பிறந்தநாள் நிகழ்வில் ஏற்பட்ட தகராறே இந்த கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பியோடியுள்ள இரண்டாவது சந்தேகநபரை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.