பிரித்தானியாவின் மகாராணி மறைந்த இரண்டாம் எலிசபெத் தனது சிறுவயதில் கையினால் எழுதிய அரிய கடிதம் ஒன்று, எதிர்வரும் 27ஆம் திகதி ஏலத்திற்கு வரவுள்ளது.
சுமார் 4,000 பவுண்டுகள் வரை ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்தக் கடிதம், 1936 முதல் 1940-க்கு இடைப்பட்ட காலத்தில் மகாராணி 10 முதல் 12 வயதிற்குள் இருந்தபோது எழுதப்பட்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வின்ட்சர் ரோயல் லொட்ஜின் தலைமைப் பணிப்பெண் பீட்ரைஸ் ஸ்டில்மேனுக்கு எழுதப்பட்ட இந்த ஒரு பக்கக் கடிதத்தில், நாய், குதிரை மற்றும் சிறு குழந்தைகளின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
மேலும், “அங்குள்ள பறவைகள் நலமாக உள்ளனவா என்றும், தங்கமீன்கள் இறந்துவிடவில்லையே?” என்றும் மகாராணி மிகுந்த அக்கறையுடன் விசாரித்துள்ளார்.
வில்லியம் வெஸ்டாகாட் என்பவர், 2024ஆம் ஆண்டு தனது தாயாரின் மறைவிற்குப் பிறகு அவரது படுக்கைக்கு அடியில் இருந்த ஒரு பெட்டியிலிருந்து இந்தக் கடிதத்தைக் கண்டெடுத்தார்.
1940 ஆம் ஆண்டு வான்வழித் தாக்குதலில் பீட்ரைஸின் உறவினர் கொல்லப்பட்டபோது, அவரது குடும்பத்தினரை ரோயல் லொட்ஜிற்கு அழைத்து இளவரசிகளுடன் விளையாட அப்போதைய ராணி அனுமதித்திருந்ததும் இக்கடிதங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
தனது 27 ஆண்டுகால ஏலத்துறை அனுபவத்தில் இவ்வளவு அழகான ஒரு பொருளைத் தான் பார்த்ததில்லை என ஹேன்சன்ஸ் ஏல நிறுவனத்தைச் சேர்ந்த ஜஸ்டின் மெத்யூஸ் தெரிவித்துள்ளார். இந்தக் கடிதத்துடன் இளவரசி மார்கரெட் எழுதிய மற்றொரு கடிதமும் ஏலத்திற்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.