ஒன்ராறியோவின் பாரி (Barrie) நகரிலுள்ள டிண்டேல் கடற்கரையிலிருந்து (Tyndale Beach) மீட்கப்பட்ட சடலம், காணாமல் போயிருந்த 61 வயதான பாரி நகரப் பெண்மணியினுடையது என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் வளைகுடாப் பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் டிண்டேல் பூங்காவிற்கு விரைந்தனர்.
குறித்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய அம்சம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள புலனாய்வாளர்கள், இது ஒரு ‘கொலை அல்லது குற்றச் செயல் அல்ல’ (Foul play ruled out) என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்தபோது, டிண்டேல் கடற்கரையில் பகல்நேர முகாமில் (Day camp) கலந்துகொண்டிருந்த குழந்தைகள் பாதுகாப்பாக டாக் வீதிக்கு (Dock Road) அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பாரி நகர மாநகர சபை ஊழியர்கள் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து குழந்தைகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
மாலை வேளையில் பொலிஸார் தமது விசாரணைகளை முன்னெடுத்ததால் டிண்டேல் பூங்கா மற்றும் கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
பாரி தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் பிரிவு இச்சம்பவம் குறித்துத் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதை உறுதிப்படுத்திய போதிலும், தீயணைப்பு வீரர்களின் உதவி தேவைப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.