தென் ஆப்ரிக்காவில் ஜி- – 20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர், நரேந்திர மோடி, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குழுக்களை எதிர்ப்பது உள்ளிட்ட யோசனைகளை அமைப் பிடம் முன்வைத்தார்.
இந்த ஆண்டுக்கான மாநாடு, ஆப்ரிக்க கண்டத்தில் முதல்முறையாக தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டின் ஒருபகுதியாக, ‘அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நீடித்த பொருளாதார வளர்ச்சி’ என்ற தலைப்பில் நேற்று நடந்தது.இதில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலக வளர்ச்சிக்கான அளவுகோல்களை மறு பரிசீலனை செய்வதற்கான சரியான நேரம் இது. அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்து நிற்கும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவின் நாகரிக மதிப்பீடுகள், குறிப்பாக ஒருங்கிணைந்த மனிதநேயக் கொள்கை வளர்ச்சிக்கு வழி காட்டுகிறது.
போதைப்பொருளும் பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகின்றன. அதனால், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் ஒருங்கிணைந்த ஒரு முயற்சி தேவை. மேலும் சில யோசனைகளும் உள்ளன. அதில் ஒன்று ஜி- – 20 கீழ் உலக பாரம்பரிய அறிவு களஞ்சியம் உருவாக்குவது. இதில், இந்தியாவுக்கு பெரும் வரலாறு உள்ளது.
இது நம் ஒட்டுமொத்த அறிவை அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் கொண்டு செல்ல உதவும் இவ்வாறு அவர் பேசினார்.