பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அபாய நிலையில் உள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் டிசம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி கூறியுள்ளார்.
அத்துடன் நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7000 பேர் தங்கியுள்ள நிலையில், அவர்களை 2 அல்லது 3 மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளில் ஆபத்து இல்லை எனக் கண்டறியப்பட்டால், அவர்களை மீண்டும் அந்த வீடுகளிலேயே குடியேற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.
அதேபோல், வீடுகளை முழுமையாக இழந்தவர்களைக் குடியமர்த்துவதே தற்போதுள்ள பிரதான சவாலாகும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டத்தை விரைவாகச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மண்சரிவு அல்லது அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தவர்களைக் குடியமர்த்துவதற்காக, பொருத்தமான அரச காணிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.