பன்விலை நகரம், திங்கட்கிழமை (08) முதல் வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அமைப்பு முறையில் ( System ) சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு இயங்காமலிருந்த மக்கள் வங்கி முதல் இயங்குவதோடு தானியங்கி சேவையும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
கண்டி -வத்தேகம மற்றும் திகன பிரதேசங்களுக்கு பஸ் போக்குவரத்துகள் இடம் பெறுவதோடு மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. வியாபார நிலையங்களும் இயங்கத் தொடங்கியுள்ளன தம்புள்ளை போன்ற பிரதேசங்களிலிருந்து போதுமானளவு மரக்கறிகளும் கொண்டு வரப்பட்டு வியாபார நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றது.தொலைத்தொடர்பு சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன.
பிரதான நகரமாக திகழும் பன்விலை நகரத்துடனான கபரகல, பம்பரல்லை, கோமரை மற்றும் பெத்தேகம பிரதேசங்களுக்கு செல்லும் வழிகளில் போக்குவரத்து செய்ய முடியாமல் பாதை உடைந்திருந்தாலும் பன்விலை நகரிலிருந்து றக்சாவ வழியூடாக கபரகல மற்றும் மடுல்கலை பிரதேசங்களுக்கும் அரத்தனை வழியூடாக கோமரை, பெத்தேகமை மற்றும் பம்பரல்லை பிரதேசங்களுக்கும் மாற்று வழிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும் முச்சக்கர வண்டிகளில் அதிக கட்டணம் செலுத்தி பயன்படுத்த கூடியதாகவுள்ளது.
விபுலாநந்தா, சிவனேஸ்வரா, மாவுஸா, பரமேஸ்வரா ,குறிஞ்சி வரகாலந்தா, ஆத்தளை, நக்கில்ஸ் ஆகிய தமிழ் வித்தியாலயங்கள் மற்றும் உலுகங்கை முஸ்லிம் வித்தியாலயம் ஆகியன போக்குவரத்து சீர் செய்யப்பட்டால் மாத்திரமே ஆரம்பிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.
விழுந்தாலும் மீண்டும் எழுவோம் என்ற நம்பிக்கையில் தமதே வாழ்க்கைப் பயணத்தை பொதுமக்கள் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது.