பாஜக தலைமையிலான என்டிஏ அரசு தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி உதவிகளை வழங்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் வந்தார்.
பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த 11 ஆண்டுகளாக வரலாறு காணாத பணிகளைச் செய்துள்ளோம்
2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக காங்கிரஸ் – திமுக ஆட்சியின்போது தமிழகதுக்கு மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் என்டிஏ அரசு அதிகாரப் பகிர்வு வாயிலாக மட்டும் கிட்டத்தட்ட ரூ. 3 லட்சம் கோடி நிதியை அளித்துள்ளது. காங்கிரஸ் – திமுக மத்தியில் ஆட்சி செய்த காலத்தோடு ஒப்பிடுகையில், இது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமானது.
இது மட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக ரூ. 11 லட்சம் கோடி மதிப்பிலான உதவிகளை அளித்திருக்கிறது.